Thursday 23 March 2017

படர் தாமரை


பாஜக இந்தியா 

பாஜக இந்தியா  முழுவதும் படர்ந்து வருகிறது என்கிற பீதியில் நான் இதை சொல்லவில்லை, ஆதிக்க மனோபாவம்கொண்ட ஒரு சித்தாந்தம்  வலுப்பெற ஆரம்பிக்கும் போதே அது அஸ்தமனம்  ஆவதற்கான காலமும் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த  வகையில் அதன் தோல்வியை நாம் இருந்து பார்ப்போமா தெரியாது, அதன் அராஜகங்களின் உச்சத்தில் அதற்கான தீர்வாகிய புரட்சி எழும். இது ஒரு சுயற்சி.

இந்தியாவில் electoral அரசியலின்   நம்பகத்தன்மையை நாம் இழந்து வருகிறோம்,  பாஜக  வாக்கு இயந்திரங்களை கடத்தி எல்லா வாக்குகளையும் பாஜகவுக்கு சேர்கிறது என்று சொல்லவில்லை, எல்லா  தளங்களையும் தனக்கு சாதகமாக்கி கொள்கிறது,  அதிகார மையத்தை தன்னோட முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

2014 தேர்தலுக்கு முன் இந்தியா முழுவதும் corruption ஒரு பூதாகரமான விவகாரமாக வெடிக்க ஆரம்பித்தது, temporary தரகராக  இந்துத்துவவாதி அண்ணா ஹாசரே செயல் பட்டார், அதன் மூலம் எழுந்த எதிர்ப்பு அலையில் மார்கழி குளிர் காய்ந்தது, அப்போதைய ஊழல் அரசாங்கங்களின் எதிரியாக செயல்பட்ட அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆம் ஆத்மீ வளர ஆரம்பித்தது,  சரியாக தேர்தல் முடிந்து 2014 ல்  ஆட்சியை கைப்பற்றிய வேகத்தில் ஊழல் அரசாங்கங்களின் குரலின் ஒரு பகுதியான அதன் நிறுவனரான கெஜ்ரிவாலின் வளர்ச்சியை முடக்க ஆரம்பித்தது பாஜக.

டெல்லியில் ஆட்சியை பிடித்தும், கவர்னருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கெஜ்ரிவால் அரசாங்கத்தை தொடர்ச்சியாக கார்னர் செய்தது பாஜக, புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும், ஊழல் அரசாங்கங்களுக்கு எதிராக புரட்சி குரலாக இருந்து பின் இந்துத்துவ அரசாங்கத்தோடு தஞ்சம் அடைந்த  கிரண் பேடியை புதுவை கவர்னராக நியமித்து காங்கிரஸ் அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.

தனக்கு எந்த வகையிலும் ஒத்து போகாத  அரசாங்கங்களை  எப்படி பாஜக கார்னர்  செய்கிறது என்பதற்கு இது நேரடி உதாரணம், இதே பாணியில் எல்லா துறையிலும் தன்னை  ஊடுருவி, இந்துத்துவத்தை; இந்தியாவில் ஏதோ ஒரு வகையில் வளர செய்யும் பணிகளை செய்வோருக்கு அரசு மானிய உதவி, ஒவ்வொரு வருடமும் அரசு விருது என்று அரசு சாரா நபர்களை கூர்மை செய்திருக்கிறது. தமிழகத்தில் அடிமை வேலை செய்வதால் தான் தந்தி டிவிக்கு சமீபமாய் தேசிய  விருது கிடைத்தது, என்பதை தவிர வேறென்ன உண்மையாக இருக்க முடியும்?

அரசியல் கட்சிகள் ஆனாலும்  சரி, இயக்கமாக ஆனாலும் சரி, மக்களிடத்தில் நற்பெயர் பெற்று அதிகாரத்துக்கு வரத்தான் தூய்மைவாதம் பயன்படுமே ஒழிய, அரசியலுக்கு என்று சில தர்ம நெளிவு சுளிவுகள் உண்டு, இது காங்கிரசுக்கும் பொருந்தும், பாஜகவுக்கும் பொருந்தும், தடை செய்யப்படுகிற இயக்கங்களுக்கும் பொருந்தும். பாஜக போல ஊழல் என்கிற குற்றசாட்டை வைத்தே திமுகவை விமர்சனம் செய்து கொண்டிருக்கும்  புத்தம் புதிய கட்சிகளுக்கும் பொருந்தும். ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் "நிறையை" முன் நிறுத்துவதும், புறம்தள்ள  வேண்டுமானால் "குறையை" வெளிச்சம்போட்டு காட்டும் மனித மனோபாவத்தை போல, சித்தாந்த ரீதியான எதிரிகளை ஒழித்து கட்டுவது தான் பாஜகவின் தற்போதைய முதல் வேலை.

அதன் படி காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பாஜக, அதிகார  மையத்தில் நகர்ந்து கொண்டிருப்பதின் சமீபத்திய இரு உதாரண சம்பவம் தான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை, உணர்வு பூர்வமான வழக்கு என்று சொல்லி,  நீதி மன்றத்திற்கு வெளியே முடித்து கொள்ள சொல்லி பரிந்துரைப்பதும், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி இருப்பதும்.

ஏற்கனவே ரிலையன்ஸ் கணக்கு பிள்ளை ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகி  விட்டார், ஆதரவான மாநில கவர்னர்களை நியமிப்பது அரசாங்கங்கள் நீண்ட காலமாக செய்து கொண்டு வருவது தான் என்றாலும், கவர்னருக்கு நீண்ட காலமாக பறிக்கப்பட்ட அதிகாரங்களை பாஜக நியமிக்கும் கவர்னருக்கு கொடுப்பதில் இருந்து, RSS என்கிற பாஜகவுக்கு வாரிசு அரசியலோ கொள்கை புரட்சியோ தேவையில்லை, பிராமணியம் என்கிற சித்தாந்தத்தின்  படி செயல்படுகிறவர் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அது ஒரே போல தான் செயல்படும் என்பதால், வழக்கமாக மத்திய அரசு பணியமர்த்தும்  அடிமை கவர்னர்களாக பாஜக கவர்னர்களை பார்க்க முடியாது.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள், சிபிஐ, ஊடகம் என்று இந்தியாவின் மொத்த top bureaucracy யும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பாஜக வின் அதிகாரம், வெறும் அதிகாரத்தை புசித்து, பணம்  ஈட்டிப் பழக்கப்பட்ட கட்சிகளின் அதிகார வெறியில்லை, இந்துத்துவத்தை முழுவதுமாய் நிறுவ தங்களுக்கு கிடைத்த மிக பெரிய சந்தர்ப்பமாக நினைத்து காய் நகர்த்தி கொண்டிருக்கிறது.

இணையத்தில் எழுதுவது வாக்கு அரசியலுக்கு உதவாது, ஆனால் நிதர்சனத்தை  நாம்  இங்கு தான் எழுத முடியும், இதன் நீட்சியாய் தான் இரட்டை இலை முடக்கப்படுவதும், ஏனைய  தொடர் நிகழ்வுகளும் நமக்கு உணர்த்தும் செய்தி.

இந்திய துறைகள் அதனதன் protocol படி தான் நடக்கிறது என்று இணையத்தில் காவிகள் எழுதுவதற்காவது, சில விவகாரங்களில் திட்டமிட்டு தலையிடாமல் பாஜக இருக்கும், ஆகையால் இதை தாமரை படர்கிறது என்று சொல்வதை விட "படர் தாமரை பரவுகிறது" என்று வேண்டுமானால் சொல்லலாம்.
முகநூலில் வாசுகி பாஸ்கர்

No comments:

Post a Comment